Monday, December 9, 2013

vedanda desikar endra magan

வேதாந்த தேசிகர் என்ற மகான்! 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். “இவருக்கு சம்ஸ்க்ருத ஞானம் நிறைய உண்டே தவிர, தமிழிலும் தமிழ்ப் பிரபந்தங்களிலும் ஈடுபாடு உண்டா?’ என்று சில மாணவர்கள் சந்தேகப்பட்டார்கள். திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யும் அந்த மாணவர்களும் அவர்களுடைய குருவும் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே தேசிகர் நடந்து வந்தார். சாதுர்யமான கேள்வி & பதில்களில் விருப்பமுள்ள ஆசிரியர், மாணவர் களிடம் ஒரு கேள்வி கேட்டார்… “”பாலபாநு என்ற சொல்லுக்கு நேர்த் தமிழ்ப் பதமாக ஆழ்வார் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அத்தகைய சொல் வரும் பாசுரம் எது?”
மாணவர் எவருக்கும் பதில் தெரியவில்லை! இதற்குள் அருகே வந்த தேசிகரை அழைத்த ஆசிரியர், இதே கேள்வியை அவரிடம் கேட்டார்.
தேசிகரோ, “”சொல்லமாட்டேன் அடியேன்…” என்று அடக்கத்தோடு சொல்லிவிட்டு அகன்றார்.
“பார்த்தீர்களா! அவருக்குத் தமிழ் தெரியாது என்று நாங்கள் அப்போதே சொன்னோமே!” என்றார்கள் மாணவர்கள்.
ஆசிரியர் அவர்களிடம் கோபித்துக் கொண்டார். “”என்ன புரியவில்லையா? அவர் சொல்லிச் சென்றாரே அதுதான் விடை. “சொல்ல மாட்டேன் அடியேன்’ என்று தொடங்குகிறது திருவாய்மொழிப் பாடல் ஒன்று. அதைத்தான் அவர் குறிப்பிட்டார். அதில் “இளஞாயிறு’ என்ற சொல் வருகிறது. “பாலபாநு’வுக்கு ஈடாக சரியான பதத்தைச் சுட்டிக் காட்டியவரை ஒன்றும் தெரியாதவர் என்கிறீர்களே!” என்று தெளிவாக விளக்கினார்.\
அந்தப் பாசுரம் இதுதான்..
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீர் இளஞாயிறு இரண்டுபோல் என்னுள்ளவா!
அல்லல் என்னும் இருள்சேர்தற்கு உபாயம் என்னே? ஆழிசூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட மாநீர்க் கொண்டல் வண்ணனே!
(திருவாய்மொழி 8 ஆம் பத்து – 5 ஆம் திருவாய்மொழி – 5 ஆம் பாசுரம்)
(ஒளி வீசும் இரண்டு இளஞாயிறு போல் உன்னிரு பாதங்கள் என் உள்ளத் துள்ளே நிறைந்திருக்கிறது. அப்படி இருக்கையில், அல்லலாகிய இருள் அதில் சூழ உபாயம்தான் என்ன? நீயே சொல்! உலகம் உண்ட பெருவாயனே! கார்மேக வண்ணனே! நின் பாதமலர்ச் சிறப்பைச் சொல்லவும் முடியுமோ?)

No comments: